பேருந்து அனுபவம்
தினம் கடக்கும் பேருந்து பயணத்தில் இன்று நான் கடந்து வந்த ஒரு நிகழ்வு. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்தில், பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே ஒரு நிறுத்தத்தில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் வேகமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகச் சென்று, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் பின் வாசல் படியில் நான் ஏறிய பொழுது, ஒரு குரல் என் காதில் ஒலித்தது. "அந்த இருக்கையில் அமர வேண்டாம்; அதில் நான் இடம் போட்டு இருக்கிறேன்" என்பதுதான் அந்த குரல். "சரிங்க அம்மா" என்று சொல்லிவிட்டு வேறு ஒரு இருக்கையில் நான் அமர்ந்தேன். மீண்டும் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் ஏறுபவர்களிடமும் அதையே சொல்லிவிட்டு, அந்த அம்மாவும் அவரது கணவருமாக சேர்ந்து இரு வயதானவர்கள் வருவார்கள் அவர்களால் வெகு தூரம் நிற்க முடியாது என்பதால் தான் சொல்கிறோம் என்றார்கள். அதைக் கேட்ட நான் சற்று மனம் நெகிழ்ந்தேன். பரவாயில்லை வயதானவர்களையும் அவர்களின் உடல் நிலையையும் பற்றிச் சிந்திக்கும் அளவிற்கு மனித மனங்கள் இங்கு பரந்து கிடக்கின்றன என்று உள்ளூர மகிழ்ந்தேன். எல...