தனிமைப் பயணம்

ஒரு நூறு பட்டாம்பூச்சிகள் 
புதிதாக சிறகு முளைத்து 
பறக்கும் பூரிப்பு என்னுள்ளே
ஒவ்வொரு முறையும் 
உன்னோடு பயணித்த நாட்களில்
இன்று சிறகொடிந்த பறவையாய் 
தனிமைப் பயணம் 

உன் விழி பார்த்து பார்த்த
வாரத்தையற்ற  உன் குறுநகையில்
என்னைத் தொலைத்து 
உன் விரல் பிடித்து விளையாடி
உன் தலைகோதி 
செல்லக்கடி கடித்து 
உன் மார்பின் மஞ்சத்தில்
தலை சாய்த்தவள் 
இன்று அனாதையாய் 
உயிரற்ற அலைபேசியில் 
உன் பெயரை மட்டும்
தடவிப் பார்த்துக் கொண்டு
நிமிடங்களைக் கரைக்க 
நினைக்கிறேன்
கல்லென கரைய மறுக்கிறது 
இந்த நிமிடங்கள் கூட 

உன்னருகிருந்து 
நீ ஊட்டிய அமிர்தத்தில்
அகம் மகிழ்ந்த நொடிகள் 
கண்முன் நிழலாட
இன்று தனிமையில்
தண்ணீரும் 
தொண்டைக்குள் செல்ல 
மறுக்கின்றன 

உன் செவ்விதழ்கள் 
ஒத்தடம் தந்த இடம் -இன்று 
கண்ணீரைக் கடன்
வாங்கி கொண்டன

என் தேவையறிந்து 
உன் தூக்கம் தொலைத்து 
பேருந்து இடைநிற்றலில் 
தேநீரோடு வருவாயே 
நீயின்றி ஏன் இந்த 
தனிமைப் பயணம் 
ஏன் என்னோடு 
வரவில்லை? 

நிலவில்லா வானமாய்
 இருள் சூழ தொடர்கிறேன் 
இந்த தனிமையின் 
கொடுமைப் பயணத்தை 
நீ இல்லா பயணம் 
இனி வேண்டாம் என்ற
வேண்டுதலோடு....







Comments

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)