கடிதத்தின் நேசம்

கடிதம் எனும் கானல் நீர்......

✍️கடிதம் 

 சிறகு முளைத்த பந்து 
இறகு முளைத்த இதயம் 
கடிதம் காகிதம் அல்ல 
வாழ்வின் அங்கமான 
காலங்கள் நினைவுகளாய்!!

✍️கடிதம் 

 காதலர்களுக்கு 
அன்பு பரிமாற்றம் 
விடுதி மாணவர்களுக்கு 
பெற்றோரின் பாசப் பகிர்வு 
நட்பு வட்டங்களுக்கு 
எல்லாமும் பகிர்ந்திடும் நாளிதழ் 
உறவுகளை உள்ளன்போடு 
இணைத்திடும் உறவுப்பாலம்!!

✍️ கடிதம் 

பலநேரம் ஒப்பனைகளோடு
 அழகான கையெழுத்தால் 
அலங்கரிக்கப்பட்ட மலர்மாலை 
சில நேரம்அவசரகதியில்
 அர்த்தம்  மட்டுமே 
விளங்கிக் கொண்டால் 
போதும் என கிறுக்கிடும் 
மழலைக் கீறல்கள் !!

✍️கடிதம் 

 நிச்சயம் முடித்துச் சென்ற 
மணமக்களின்
ஏக்கங்களுக்கும் 
தவிப்புகளுக்கும் 
மயிலிறகால் 
 வருடிச் செல்லும் 
அற்புத மருந்து !!

✍️அன்று 
இன்செய்தி கொண்டு வரும் 
அஞ்சல்காரரைக் 
கட்டி அணைத்துக் 
கொண்ட காலம் 
துன்ப செய்தியில் 
அஞ்சல்காரின் 
விரல் பிடித்து 
தோல் சரிந்து 
ஆறுதல் தேடிக் 
 கொண்ட காலம் - இன்று 
எல்லாமும் கானல் நீரே !!

✍️அன்று 
கடிதத்தின் வார்த்தைகளில் 
உணர்வுகளோடு 
முகம் கண்டு ரசித்து 
என் மருமகன் 
என் மருமகள் என்று 
உறவு கொண்டாடி 
மகிழ்ச்சியின் 
உச்சம் தொட்ட காலம் -  இன்று 
கானல் நீரே !!

✍️அன்று 
படித்து முடிக்கப்பட்ட கடிதங்கள் 
மிக முக்கிய ஆவணங்கள் 
நலம்.  நலமறிய ஆவல்? 
எனத்தொடங்கும் கடிதத்தில் 
ஆடு , மாடு , கோழி , குருவி 
விசாரிப்பு தொடங்கி 
தோட்டத்து கத்தரிக்காய் வரை 
அத்தனை விசாரிப்புகளும் 
ஆழமாய் அடங்கிவிடும் !!


✍️பலருக்கு எழுத்துக்கூட்டி 
படிக்க கற்றுக் கொடுத்ததே 
கடிதமெனும்  இக்காவியமே !!
பிழையின்றி ஒரு கடிதம் 
எழுதினால் பலநூறு பட்டங்கள் 
பெற்றுவிட்ட பூரிப்பு !!

✍️அன்று 
பேனாவில் உருவான 
நட்பு வட்டம் -  இன்று 
முகம் தெரியா 
முகவரி அறியா 
முகநூல் நண்பர்களுடன் 
நட்புவட்டம் புலன வழியில்
மாறி விட்ட காலம் !!

✍️இன்று கடிதம் 
மொழிப் பாடத்தில் 
திறன் வளர் பயிற்சியாய் மட்டுமே
மாணவர்கள் மத்தியில் !!

✍️எழுதுகோல் பிடித்து 
மடல் வரையும் பழக்கம் 
மறைந்ததால் 
செல்லிடை பேசியில் 
சொடுக்கு விடும் நொடியில் 
அத்தனையும் 
பகிரப்படுகிறது 
உறவில்லாமல் 
உணர்வில்லாமல் 
உயிரில்லாமல்... 

✍️கடிதமும் நம் கலாச்சாரமே 
காலங்கள் மாறினாலும் 
மண்வாசனை மாறிடாத  
பண்பாடு நம் பண்பாடு........
போற்றிடுவோம் 
நம் கலாச்சாரத்தை....





Comments

  1. Chance less words... உன் எழுதுகோலுக்கு மந்திரக்கோல் என பெயர் மாற்றம் செய்துவிடு... மயக்கும் உன் சொற்களுக்கு மயங்கி கிடக்கும் நாட்கள் மிக அழகானவை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)