கொரானாவின் கோரத்தில் சிக்கிய ஒரு உயிரின் உண்மைக் கதை

🩸தாயின் அரவணைப்பில்
பாலூட்டி சீராட்டி வளர்க்க 
வேண்டிய பிள்ளை
சூழ்நிலையால் தாய்மாமன் 
வீட்டில் விடப்பட்டான் 

🩸பிழைப்புக்காய் பெற்றோர் 
அண்டை மாநிலம் செல்லவே 
அன்பு ,பாசம், அக்கறை ,
அரவணைப்பை இழந்தவனாய் 
இரண்டு வயது முதல் 
தன்னிச்சையாக 
வளர ஆரம்பித்தான் 

🩸தன்னிலை தன் பிள்ளைக்கு 
வேண்டாம் என 
பெற்றோர் நினைக்கவே 
தாய்மாமன் வீடே 
நிரந்தரமானது 

🩸நாளொரு மேனியும் 
பொழுதொரு வண்ணமுமாக
அரசுப் பள்ளியும் , ஆசிரியர்களும் 
வளர்த்தெடுக்கவே 
படிப்பு ,பண்பு ,விளையாட்டு
என அனைத்திலும் 
பெற்றோரும்,  வளர்த்தவர்களும் 
பள்ளியும்,  ஊராரும் 
பெருமைப்படும் வகையில் 
கெட்டிக்காரனாய் வளர்ந்தான் 

🩸பட்டாம்பூச்சியாய் சிறகடித்து 
பறக்க வேண்டிய 
பள்ளிப் பருவத்தில் 
சில நேரம் வீட்டுச் சமையலும் 
அவனுடையதே 
அதிகாலை எழுந்து 
ஓட்டமும் நடையுமாய் 
ஓடிச்சென்று 
ஐந்து ரூபாய்க்கும் 
பத்து ரூபாய்க்கும் 
தோட்டத்து வேலை செய்து 
மீண்டும் ஓடி வந்து 
கால் வயிறு நிரப்பி 
உற்சாகமாய் பள்ளி சென்றவன் 
கல்வி தான் எதிர்காலம் 
என்பதை புரிந்தவனாய் 
பெற்றோரின் கஷ்டம் 
உணர்ந்தவனாய் கற்றான் 

🩸ஆர்வமும் முயற்சியும் 
கை கொடுக்கவே 
நல்ல மதிப்பெண்களோடு 
பள்ளிப் படிப்பை முடித்தான் 
அவன் விருப்பப்படியே 
கல்லுரிப் படிப்பில் சேர்ந்தான் 

🩸ஏறாதபடி ஏறி கால்கடுக்க 
வங்கி வாசலில் காத்திருந்து 
கல்வி கடன் பெற்று 
கற்கத் தொடங்கினான் 

🩸யாரையும் கஷ்டப் படுத்தாதவனாய் 
அதிகாலை எழுந்து 
வெறும் வயிற்றோடு 
5 கிலோமீட்டர் 
சைக்கிள் மிதித்து 
தொடர்வண்டி பிடித்து 
கல்லூரி வாசல் மிதித்தவனுக்கு 
தோழமைகளும் , ஆசிரியர்களும் 
அவன் வயிற்றுப் பசியோடு 
அறிவுப் பசியையும் நிரப்பிட 
கல்வியோடு வாழ்க்கைக் 
கல்வியையும் கற்றான் 
கிராமப்புற பள்ளியில் 
படித்ததால் ஆங்கிலம் 
சற்று சிரமமாக , 
ஆர்வம் உந்திடவே 
ஆங்கிலத்தில் அசத்தினான் 

🩸கல்லூரி , படிப்பு , வீடு என 
ஐந்தாண்டுகள் 
கடத்திய அவனுக்கு 
கிரிக்கெட் என்றால் 
அலாதிப் ப்ரியம் 
வாலிபத்தில் சிறிதும் 
தடுமாறி தடம்மாறிடாது 
தன்னிலை உணர்ந்தவனாய் 
படிப்பை முடிக்கும் போதே 
வேலையுடன் வந்தவன் 

🩸எந்நிலையிலும் 
தன் செயலுக்காய் 
யாரையும் 
தலைகுனியச் செய்திடாத
வளர்ப்பு அவன் 

🩸கை நிறைய சம்பளம்
வாங்கினானே தவிர 
தேவைகளைக் குறைத்துக் 
கொண்டு ஆடம்பரம் தவிர்த்து 
தன் கல்விக் கடனை தானே 
கட்டி முடித்தவன் 

🩸ஒவ்வொரு ரூபாயின் மதிப்பு
உணர்ந்து அதே நேரம் 
உதவிடும் உயரிய
குணமும் கொண்டவன் 

🩸மெல்ல மெல்ல வாழ்க்கை 
படியேறிதனக்கென
 ஒரு எளிய வாழ்க்கை 
அழகான இரண்டு குழந்தைகள் 
மின்சாரம் இன்றி 
தெருவிளக்கில் கற்றவன் 
வங்கி கடன் பெற்று 
சின்னதாய் ஒரு 
வீடு கட்டி ரசித்தவன் 

🩸இரவு பகல் பாராது உழைத்து 
வீட்டுக் கடன் முடித்து 
அப்பாடா என்று பெருமூச்சு
விடுவதற்குள் அவன் 
மூச்சையே நிறுத்திடும் 
அளவிற்கு கொரானா 
அவனை இழுத்துக் கொண்டது 

🩸அடிமட்டத்திலிருந்து 
அடிபட்டு அடிபட்டு 
மேலே ஏறியவனை 
ஒரே அடியாய் அடித்துக் 
கீழே தள்ளியது 
இந்தக் கொரானா  
என்னும் கொடூரம்

🩸அத்தனை கஷ்டத்தையும் 
அனுபவித்தாய் 
மரணத்தையும் அனுபவித்து வா 
என்று விதி கூறியதா 
தெரியவில்லை 

🩸மரணப்படுக்கையில் 
தன்னிலை மறந்தவன் 
கடவுளின் கருணையாலும் 
கடவுளாய் வந்த 
மருத்துவர்கள் , செவிலியர்கள் 
உதவியாலும் 
பலநூறு உள்ளங்களின் 
நம்பிக்கையாலும் 
தொடர் பிரார்த்தனையாலும் 
மறுபிறவி எடுத்து வந்தவன் 

🩸அவன் உயிரின் விலை 
பல இலட்சங்கள் என்பது 
புரியாத புதிராயினும் 
கடனாய்ப் பெற்ற 
இலட்சங்களை 
திருப்பிச் செலுத்திட 
ஓடத் தொடங்கும் இவனது 
வாழ்க்கைப் பயணம் 
விதியின் விளையாட்டா ?
விதி செய்த சதியா ?
புரியவில்லை !

🩸மரணத்தோடு 
போராடிய அவனது 
ரணங்களை 
கண் கொண்டு 
காண முடியாது 
துடிதுடித்த அவனை 
உயிராய் நேசிக்கும் 
அன்பு அக்காவின் 
ஆசையெல்லாம் 
ஒன்றே ஒன்று தான் 

🩸அவன் 
நீடிய ஆயுள் பெற்று 
நிம்மதியாய் 
வாழ வேண்டும் 
என்பது மட்டுமே......









Comments

  1. Excellent writing... very clear description as a poetry... Very affectionate akka... U r...nice...

    ReplyDelete
  2. It very comforting and touching line with whole heart by Nandhini

    ReplyDelete
  3. இத்தனை துயரிலும் அவனுக்கு துணையாய் நிற்கும் உன்னைப் போன்ற உடன் பிறந்தவள் கிடைத்தது வரமே... இத்தனை தடை தாண்டிய உன் தம்பிக்கு இதுவும் எளிய வலியென நிச்சயம் கடந்து போகும்... காலம் எதையும் மாற்றும்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நட்பே. 👍👍

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. ஆழமான வரிகள் ஆழமான பாசம்
    ஆழமான உணர்வுகள்...மிக அருமை

    ReplyDelete
  5. கஷ்டத்தை சொல்வதற்கு வார்த்தை இல்லை... என்பார்கள்... ஆனால் உங்களது வரிகள் அவர் பட்ட கஷ்டங்களை கண் முன்னே நிறுத்துகிறன.....அழகிய இலக்கிய நயத்துடன் எழுதப்பட்ட கவிதை... மேலும் பல கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)