என் அன்னைக்கு சமர்ப்பணம்
❣️என் அன்னைக்கு ஒரு தினம்
அன்னையர் தினம்
❣️அழகில் தேவதை - நீ
அன்பின் ஆரம்பம் - நீ
அடக்கத்தின் அந்தம் - நீ
வீரத்தின் விதை- நீ
தீரத்தின் திமிர்- நீ
❣️உன் புகழ் சொல்லிட
ஒருநாள் போதாது
என் அன்னையே !
❣️உனக்கோர் கவி மாலை தொடுத்திட
கடலிடம் சென்று முத்துக்கள்
கடனாய்க் கேட்டேன்
வானத்திடம் சென்று விண்மீன்கள் கடனாய்க் கேட்டேன்
காற்றிடம் சற்று கானம்
கடனாய்க் கேட்டேன்
பூமாதேவியிடம் சில வைரங்கள்
கடனாய்க் கேட்டேன்
அனலிடம் அக்னியின் மணம்
கடனாய்க் கேட்டேன்
பஞ்ச் பூதங்களிடமும்
கடன் பெற்றேன்
போதவில்லை அம்மா
உன் புகழ் மாலை புனைந்திட !
❣️ஒரு துளி உயிரணுவைப் பெற்று
உதிரத்தால் உருமாற்றினாயே
உதிரத்தையே உணவாக்கினாயே
எத்தனை பெரும்
அற்புதம் செய்தவள் நீ !
❣️எனை சுமப்பது வலி
என்று தெரிந்தும்
கோவில் , குளம் ஏறி
வரம் பெற்று வலியறியாமல்
வயிற்றில் பத்து மாதமும்
மார்புக்கூட்டினுள் மிச்சக்காலமும்
சுகமாய் சுமக்கும்
சுமைதாங்கி நீ !
❣️என்னைத் தரணிக்குத் தந்து
முதல் முகவரி கொடுத்து
முழு முகவரியும் நீயாகினாயே !
❣️நடக்கையில் விழுந்தால் தான்
நடைபழக முடியுமென்றறிந்தும் பச்ச
உன் நெஞ்சம் பதைக்குமே
இதுவல்லவா தாய்ப்பாசம் !
❣️அமிர்தம் விண்ணுலகில் அல்ல
நீ ஊட்டிய நிலாச்சோறு தான் தாயே !
❣️அன்பு என்ற வார்த்தையை
தமிழ் அகராதிக்கு
கடனாய்த் தந்தவள்
நீ தானோ ?
❣️உன் அன்பிற்கு ஈடுஇணை உன்
அன்பைத் தவிர வேறொன்றுமில்லை
❣️என் முகம் காணும் முன்னே
நிதம் என்னைத் தொட்டு ரசித்து
என் வாழ்வின் அர்த்தம் நீ
என்று சொல்லி
கனவுக்கோட்டை கட்டியவள்
அல்லவா நீ !
❣️என் அழுகையில் நீ சிரித்தது
அந்த ஒருநாள் மட்டுமே
உலகில் கால் பதிக்கும் முன்
நான் கேட்ட முதல் ஓசை
உன் இதயத்துடிப்பு !
❣️வெயில் மழை என்று பாராது
கள்ளும் முள்ளும் கடந்து
கால் வயிறும் அரைவயிறும் - ஏன்
வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொண்டு என் வயிறு
நிறைத்த தருணங்கள்
எத்தனை எத்தனை
மதியையே இழந்தாலும் உன்
தியாகமதை மறவேனா தாயே ?
❣️என் விருப்பு வெறுப்பு
நான் சொல்லாமல் அறிந்த
வித்தகி நீயல்லவா !
❣️சோகங்கள் வதைத்தாலும்
துன்பங்கள் துவைத்தாலும்
தொல்லைகள் துரத்தினாலும்
உன் மடிச் சொர்க்கமதில்
தலைசாய்திடும் போது
உச்சி முகர்ந்து
தலைக்கோதிடும் -உன்
தாய்ப்பாசம் ஒன்று போதும்
துன்பங்கள் தூளாய் மாறி
காற்றில் கரைந்திட
உலகத்தை ஜெயித்திடும்
வல்லமை வந்திடும் என்னில் !
❣️அன்பெனும் அதீத சக்தி கொண்டு
அகிலத்தையும் ஆளும்
திறன் கொண்ட
அடக்கத்தின் அத்தியாயம் நீ !
❣️உன் வாழ்வு முழுவதும் எனக்காக
எனக்கே எனக்காக அர்ப்பணித்த
ஒருத்தி நீ மட்டுமே !
❣️தாயாக நான் மாறி - என் சேயை
கொஞ்சிடும்போது
உணர்ந்தேன் - உன்
தாய்மையின் மகத்துவத்தை
❣️அன்பு ,அரவணைப்பு ,
பந்தம் ,பாசம், நேசம் ,
கருணை , இரக்கம் ,
பொறுமை , பொறுப்பு ,
வீரம் , தீரம் , தியாகம் ,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு, காதல்
அத்தனைக்கும் இலக்கணமாக
உன்னைத் தவிர வேறுயாரை
காட்டிட முடியும் தூயவளே !
❣️தென்றலின் தீண்டல் சுகம்தான்
மழைச்சாரலின் ஸ்பரிசம் சுகம்தான்
மலரின் மணம் கூட வாசம் தான்
ஆனால் ,
நல்லவளே, உன் தாயன்பின் முன்
அத்தனையும் தோற்றுவிடுமல்லவா ?
❣️இறைவனிடம் நிதம் பிரார்த்திக்கிறேன்
என் ஜீவனுள்ள நொடி மட்டும்
என் தாயவளின்
விழி கலங்கிடா வண்ணம்
அவளை சுகபத்திரமாய்
பார்த்துக் கொள்ளும்
பலன் தந்திடு இறைவா என்று
❣️எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
நீயே என் தாயாக
நீயே என் தாயாக.....🙏🙏🙏
நீ கவிதை படைப்பவள் அல்ல... கவித்தாய் படைத்தவள்.... சொல்லுக்கு சிறக்க சொல்லிகொடுக்கும் அன்பு தோழி.... அழகு கவிதை.... என் அன்னைக்கும் உன் பரிசாய்...
ReplyDeleteஎன் கவித்தோழியே
Deleteநம் அன்னைக்கு
என் பரிசு
நீ என்னோடு இருப்பதால் மட்டுமே..
அன்னையின் பால் கொண்ட அன்பால் அன்னைத் தமிழால் பாமாலை சூட்டினாய்! கவிக்குட்டி யானாய்!
ReplyDeleteஅருமை! இனிமை!
ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழை
உன்னாலன்று
Gboard-ஆல் என்று நினைக்கிறேன்.